Tamilசெய்திகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிவு

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாலும், அன்னிய முதலீடு குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையை அந்நாட்டு அரசு உயர்த்தி உள்ளது.

மேலும் இறக்குமதியாளர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஆகியவை டாலரை அதிகம் வாங்கி குவித்து வருவதாலும் ரூபாயின் மதிப்பில் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

இதனையடுத்து ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த உடனடியாக கூடுதல் நடவடிக்கை எடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைவது சற்று கட்டுப்படுத்தப்பட்டது.

சில நாட்களாக ஓரளவு உயர்ந்து வந்த நிலையில் இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக 74.48 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று வர்த்தகம் ஆனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *