Tamilசெய்திகள்

நியமன எம்.எல்.ஏ-களுக்கு சம்பளம் வழங்கும் புதுவை அரசு

புதுவை சட்டமன்றத்திற்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய உள்துறை நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.பா ஜனதா மாநில தலைவர் சுவாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.களாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார். இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. அதோடு எம்.எல்.ஏ.க்களை சட்டசபையில் செயல்பட அனுமதிக்கவும் அறிவுறுத்தியது.

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். ஆனால் அவர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக செயல்படுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் கூறினார். அதோடு எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய எந்தவொரு சலுகையும் அவர்களுக்கு வழங்கப்பட வில்லை.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வக்கீல் முகுல்ரோத்கி, நியமன எம்.எல்.ஏ.க்களும் மற்ற எம்.எல்ஏ.க்களை போன்றவர்கள்தான். எனவே அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். இதற்கு புதுவை அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதையடுத்து பாரதிய ஜனதா நிர்வாகிகள் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுத்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, உச்சநீதீன்றம் அளித்த காலக்கெடு முடிவடைந்து விட்டதால் சட்டமன்ற நிகழ்வில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று கூறினார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் எதிரொலியாக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு சட்டசபைக்குள் அனுமதிக்க அறிவுறுத்திய ஜூலை மாதம் 19-ந்தேதியை கணக்கிட்டு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 150 அவர்களது வங்கி கணக்கில் கடந்த 29-ந்தேதி செலுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 13 நாட்களுக்கும், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு முழுமையான தொகையும் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அறைகளோ, பிற சலுகைகளோ வழங்கப்படவில்லை. இதற்கிடையே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் 9-ந்தேதி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *