Tamilசெய்திகள்

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கூடுதல் மழை – அமைச்சர் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனத்தில் 15 செமீ மழை பெய்துள்ளது. மானாமதுரையில் 13 செமீ, சித்தம்பட்டியில் 12 செமீ, ராமேஸ்வரத்தில் 9 செமீ, பரமக்குடியில் 8 செமீ மழை பதிவாகி உள்ளது.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும் சில மீனவர்களுக்கு இந்த தகவல் கிடைக்காததால் அவர்கள் கரை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வருவாய்த்தறை அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து மழை நிலவரம் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் இந்த சீசனில் 29 மாவட்டங்களில் இயல்பைவிட கூடுதல் மழை கிடைத்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பருவமழை குறித்து மக்கள் அச்சப்ட தேவையில்லை. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 46 படகுகள் தகவல் தொடர்பின்றி இருக்கின்றன. 15 படகுகளுக்கு தகவல் தெரிவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு மத்திய மற்றும் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ‘லுபான்’ என்ற புயலாக மாறி ஓமனை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *