Tamilசெய்திகள்

1500 புதிய பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் – போக்குவரத்து துறை அமைச்சர்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனைத்து போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமைச்செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்துத்துறையின் முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள், நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை விரைந்து வழங்குதல், பணிமனைகளை பழுது நிவர்த்தி செய்தல், போக்குவரத்து மானியக் கோரிக்கையில், அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகளின் தற்போதைய நிலை, முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய பஸ்களின் இயக்கம் மற்றும் வசூல் நிலவரம், கிராமப்புற மக்களின் போக்குவரத்துத் தேவைகளை ஈடுசெய்கின்ற வகையில் கூடுதல் பஸ்களை இயக்குதல், சுற்றுச்சூழல் மாசுப்படுவதை குறைக்கின்ற வகையில், சென்னை, கோவை மற்றும் மதுரையில் மின்சாரப் பஸ்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து விரிவாக கலந்தாலோச்சிக்கப்பட்டன.

அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

இந்த அரசின் சார்பில், இரண்டு கட்டங்களாக 1,500 கோடி ரூபாய் செலவில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, அவற்றில் ஏறத்தாழ 3,500 பஸ்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 1,500 பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.

சுற்றுச்சூழல் நலனை போற்றி பாதுகாக்கிற வகையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக, மின்கலன் அல்லது மின்சாரத்தில் இயங்கும் பஸ்களை சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் இயக்கிடும் பொருட்டு, சி-40 என்ற பன்னாட்டு அமைப்பின் மூலம் செயல்படுத்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடன் உதவியோடு, 12 ஆயிரம் புதிய பி.எஸ்.-6 தரத்திலான பஸ்களையும், 2 ஆயிரம் மின்சாரப் பஸ்களையும் வாங்கிடும் திட்டம், நடப்பு நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரப் பஸ்களை சென்னையில் இயக்குவதற்கான முக்கிய வழித்தடங்கள், சார்ஜிங் பாயின்ட்ஸ் அமைத்தல் குறித்து விவரமான திட்ட அறிக்கை அந்நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.

தமிழகத்தின் 8 அரசு போக்குவரத்து கழகங்களிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டிரைவர்களுக்கு சீரிய முறையில் தரமான பயிற்சிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிற சிறப்பு கூட்டங்களும், நலன்களை பாதுகாக்கின்ற வகையில், மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து கழகங்களின் பணிகளை மேம்படுத்திடும் வகையில், சமீபத்தில் 14 பொது மேலாளர்களுக்கு மேலாண் இயக்குனர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கழகங்களின் கடுமையான நிதி நெருக்கடியிலும், இத்தகைய பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *