Tamilசெய்திகள்

கோடை விடுமுறை முடிந்தது – இன்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சினை ஆகிய காரணங்களால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தகவல்கள் பரவின.

இதனால் மாணவர்கள்-பெற்றோர்கள் குழப்பம் அடைந்தனர். இந்தநிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு, திட்டமிட்டப்படி ஜூன் 3-ந்தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும்’ என்று அறிவித்தார். அதன்படி 50 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியவுடனேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை பள்ளி கல்வி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படும். அதே வேளையில், ஒரு சில தனியார் பள்ளிகள் வருகிற 7-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை), சில தனியார் பள்ளிகள் 10-ந்தேதியும் (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களுக்கு செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *