Tamilசெய்திகள்

குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல் அடையாளம் காணப்பட்டது!

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த மாதம் 21-ம் தேதி ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட கை, கால்கள் கிடந்தன. அந்தப் பெண்ணை யாரோ கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி கை கால்களை மட்டும் குப்பைக் கிடங்கில் போட்டிருந்தனர். கைப் பகுதியில் பச்சை குத்தப்பட்டிருந்தது. உடல் பாகம் கண்டுபிடிக்கப்படவில்லை.

வெட்டப்பட்டு கிடந்த கை, கால்களை போலீசார் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதில் உள்ள அடையாளங்கள் மற்றும் காணாமல் போன பெண்கள் தொடர்பான அங்க அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், அங்கு கொட்டப்பட்ட குப்பை கோடம்பாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியலை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

2 வாரமாக நடைபெற்ற தீவிர விசாரணையில், அந்தப் பெண் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் பெயர்களை வைத்து விசாரித்ததில் துப்பு துலங்கியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், கணவர் ராமகிருஷ்ணனுடன் சென்னை ஜாபர்கான்பேட்டையில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராமகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *