Tamilசெய்திகள்

எளிமையான முறையில் இந்தியா வந்த சுவீடன் நாட்டு மன்னர்!

சுவீடன் நாட்டு மன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப், ராணி சில்வியா ஆகியோர் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தனர்.

முன்னதாக அவர்கள் ஸ்டோக்கோமில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கோளாறு காரணமாக விமானத்தை இயக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதை மன்னரும், ராணியும் ஒரு பிரச்சனையாக கருதி ஆத்திரப்படவில்லை. உடனே ஏர்-இந்தியாவின் போயிங் 787 டீரிம்லைனர் விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்தனர்.

அந்த விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு இருவருக்கும் டிக்கெட் புக் செய்யும்படி அரண்மனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மன்னர்- ராணிக்கு டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு அவர்கள் ஏர்-இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.

விமானத்தில் மன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப்புக்கு இந்திய உணவு பரிமாறப்பட்டது. அதை அவர் மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிட்டார்.

மன்னர், ராணி ஆகியோர் சக பயணிகளோடு, பயணிகளாக பயணம் செய்தனர். விமானம் டெல்லி வந்தடைந்ததும் இருவரும் கீழே இறங்கினர்.

அப்போது மன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப் தனது லக்கேஜை தானே தூக்கி வந்தார். அதை தன்னுடன் வந்த அதிகாரியிடம் கொடுக்காமல் ஒரு சாதாரண பயணி போல் பெட்டியை தூக்கி சென்றார். அவரது எளிமையை பார்த்து மற்ற பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, சுவீடன் நாட்டு மன்னரும், ராணியும் ஒரு சிறப்பு மிக்க நபர்கள் போல் வெளிகாட்டவில்லை. விமான ஊழியர்கள் குழுவுடன் மிகவும் அமைதியாக நடந்து கொண்டனர். நாங்கள் கொடுத்த விருந்தோம்பலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். இந்திய உணவுகளை மன்னர் விரும்பி சாப்பிட்டார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *