Tamilசினிமா

யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள்!

தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் ஜோடி திரைப்படங்களில் அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த வேளையில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரண் அறிமுகப்படுத்தபட்டவர் தான் வடிவேலு.

இவரது யதார்த்தமான உடல் மொழியும், வசன உச்சரிப்புகளும் திரையரங்குகளில் படம் பார்க்கும் ரசிகனை ஏகாந்த நிலைக்கு கொண்டு சென்றது. நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் இவர் தனி ஆளாக என்ரி கொடுக்கும் போதே அரங்கம் அதிரும்.

தனிநபராக மக்கள் செல்வாக்கை பெற்ற வடிவேல் 2006ல் சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் கதை நாயகனாக நடித்தார். முதல் படமே பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியது.

அதன் பின் கதாநாயகனாக நடிக்க முன்னுரிமை கொடுக்க தொடங்கினார் பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. நாயகனாக நடித்துசொந்தமாக தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

காமெடி கேரக்டரில் நடித்த போது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதாநாயகனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை கேட்கும் தயாரிப்பாளர் திரும்பி வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டு வருவதே இல்லை என்கின்றனர்.

ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு காமெடியனாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய சினிமா வியாபாரத்தில் வடிவேலு நாயகனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர்.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனக்கோ பசியே கிடையாது என கூறுகிறாராம் வடிவேல். இதனால் வடிவேல் நாயகனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *