Tamilசெய்திகள்

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்!

இஸ்லாமியர்களின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு அதன்பின்னர் சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30 நாட்கள் நோன்பு முடிந்து பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

அவ்வகையில் இந்தியாவில் கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் முதலில் பிறை காணப்பட்டதையடுத்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. மற்ற மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. மக்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கமான உற்சாகத்துடன் இப்பண்டிகையை கொண்டாட முடியவில்லை. மிகவும் எளிமையாக கொண்டாடினர். மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளின் ஹால்கள், மொட்டைமாடி போன்றவற்றில் குடும்பத்தினருடன் சமூக இடைவெளியுடன் தொழுகை நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளாவைப் பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டது.

வளைகுடா நாடுகள் அனைத்திலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடித்துக் மக்கள் இப்பண்டிகையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *