Tamilசினிமா

”இந்த ஏமாத்து வேலைய செய்யாதீங்க” – யோகி பாபு வருத்தம்

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. ஒருசில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடித்த பழைய படங்களை எல்லாம் தூசி தட்டி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. ஒரு சில காட்சிகளில் மட்டுமே யோகி பாபு நடித்திருந்தாலும் அந்த படத்தில் யோகி பாபு முழுவதும் நடித்திருப்பது போன்ற விளம்பரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சில தினங்களுக்கு முன்பு தெளலத் என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. இதில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல் சித்தரித்திருந்தனர். இதற்கு யோகிபாபு, எனக்கும் தௌலத் படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யோகிபாபு. அதில், “சில வருடங்களுக்கு முன்பு சின்ன சின்ன படங்களாக நிறைய நடித்துள்ளேன். அந்தப் படங்கள் எல்லாம் இப்போது வெளியாகிறது. அந்தப் படங்களில் எல்லாம் 2, 3 காட்சிகள் தான் நடித்திருப்பேன். இப்போது என்னுடைய புகைப்படத்தைத் தனியாக போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள்.

எனக்கென்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லாம் இந்த மாதிரியான போஸ்டர்களால் ஏமாந்து போய்விடுகிறார்கள். இடைப்பட்ட காலங்களில் என்னுடைய புகைப்படம் மட்டும் போட்டு சிலர் ஏமாற்றியுள்ளார்கள். சிலர் எனக்கு தொலைபேசி வாயிலாக, உங்கள் புகைப்படத்தைப் பார்த்து தான் தியேட்டருக்கு சென்றோம். ஆனால், 2 – 3 காட்சிகளில் தான் வருகிறீர்கள் என்று சொன்னார்கள்.

இதனால் எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இடையே ‘தெளலத்’ என்ற படத்துக்குக் கூட அப்படியொரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில் சிவன் தான் ஹீரோ, நான் அல்ல. தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீர்கள். என்னை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுக்கும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் திட்டத் தொடங்கிவிட்டார்கள். விநியோகஸ்தர்கள், ரசிகர்களை எல்லாம் ஏமாற்றுவது போல் இருக்கிறது. தயவு செய்து அந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.

நான் முழுமையாக நடித்திருந்தால் போடலாம் தவறில்லை. ஆனால் 2-3 காட்சிகளுக்கு எல்லாம் போடுவது தவறு. அது எனக்குத் தான் பாதிப்பாக இருக்கிறது. 2-3 சீன் நடித்திருக்கிறேன் என்றால் அந்தப் படக்குழுவினரோடு இருப்பது போல் புகைப்படம் போடுங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள். தயவு செய்து தனி புகைப்படம் போட்டு போஸ்டர்கள் வெளியிடாதீர்கள்.

இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *