Tamilசெய்திகள்

தமிழகத்தில் பரவும் பன்றி காய்ச்சல் – 4 பெண்கள் பலி

தமிழகத்தில் இதற்கு முன்னர் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான காய்ச்சல் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘சிக்குன் குனியா’ காய்ச்சல் தமிழக மக்களை பாடாய்படுத்தியது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் திடீரென பரவியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டன. தமிழக சுகாதாரதுறை அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டன. இருப்பினும் பன்றிக் காய்ச்சல் வைரசின் வீரியம் குறைய வில்லை. அது கடும் தாக்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.

நேற்று ஒரே நாளில் பன்றிக் காய்ச்சல் 4 பெண்களின் உயிரை பறித்துள்ளது. மதுரையில் 2 பெண்களும், நாகர்கோவில், விழுப்புரத்தில் 2 பெண்கள் பலியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் அடக்கம்.

மதுரை இரும்பாலை பகுதியை சேர்ந்த மீனாட்சி (41), அனுப்பனாடி பகுதியை சேர்ந்த வீரம்மாள் (70) ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனையடுத்து 2 பேரும் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலன் அளிக்கவில்லை. மீனாட்சி, வீரம்மாள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் சுகன்யாவும் காய்ச்சலால் அவதிப்பட்டார். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சுகன்யா உயிரிழந்தார். இவருக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை திரேசாவும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். முதலில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறப்பு வார்டில் அவரை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

4 பேரை பலி வாங்கிய பன்றிக் காய்ச்சல் தமிழகம் முழுவதுமே பரவலாக பரவியுள்ளது. காய்ச்சல் பாதிப்பால் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வயது பெண் குழந்தையும், 2 பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆணும், பெண்ணும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கரூரை சேர்ந்த 69 வயது முதியவரும், ஈரோட்டை சேர்ந்த 9 வயது சிறுமியும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 37 பேருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சாரதா என்ற பெண் உள்பட 2 பேர் பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சல் பாதித்த 39 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொளத்தூர் தணிகாசலம் நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் இரட்டை குழந்தைகளான தீக்ஷா, தர்‌ஷன் ஆகியோர் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரு குழந்தைக்கு ரத்த கசிவு ஏற்பட்டு வலிப்பு உண்டானது. மற்றொரு குழந்தைக்கு ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. 2 குழந்தைகளையும் காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு மொத்தம் 6 பேர் உயிர் இழந்து உள்ளனர். #swineflu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *