டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் – முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தூத்துக்குடியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து திருச்செந்தூர் தூத்துக்குடி மெயின் ரோட்டில் ஆதித்தனார் கல்லூரி அருகில் உள்ள சிவந்தி அகாடமி வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் செலவில் மணிமண்டம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந்தது. பின்னர் விழா தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திருச்செந்தூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பாமர மக்களும் கல்வி அறிவு பெறும் வகையில், தமிழ் வளர்த்து சேவை செய்த சி.பா.ஆதித்தனாரை போன்று, அவருடைய மகன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும் மக்களுக்கு சேவை செய்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா வருகிற 26-ந்தேதி நடக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்ட இருக்கிறார். திருச்செந்தூரில் நடைபெறும் விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools