உத்தரப் பிரதேசத்தில் போர்வையில் சுற்றப்பட்ட தாய், மகள் சடலம் கண்டெடுப்பு! – கணவரை காணவில்லை
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் முன்னர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குழு கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் ஷபினா மற்றும் அவரது மகள் இனயாவின் உடல்கள் இருப்பதைக் கண்டனர்.
அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் ஷபினாவின் கணவர் ரஷீத்தை காணவில்லை. ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.
ரஷீத் தனது மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.