Tamilசெய்திகள்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம்

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாள் இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரதோர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். விளையாட்டு வீராங்கனை தீபா கர்மாகர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

சென்னையில் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா, மாநில முதல்வர் சர்பானந்த சோனோவல் ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தனர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்தார்.

படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில் நிறுவப்பட்டுள்ள மிகப்பிரமாண்டமான சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *