ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிறைவு நாள் பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஷீரடி செல்கிறார். அதைத்தொடர்ந்து, பக்தர்கள் வசதிக்காக ஷீரடியில் புதிதாக கட்டப்படவுள்ள மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அங்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிடுகிறார்.

மேலும், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஏழை மக்களுக்கு வழங்கவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஷீரடி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டு சாய்பாபாவின் மகாசமாதி தின பூஜையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: ModiShirdi