Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – 600 ரைடு புள்ளிகளை எடுத்த தமிழ் தலைவாஸ் வீரர்

அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 7-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் புனேரி பல்டானை நேற்று எதிர்கொண்டது.

இதில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அஜய் தாகூர் அபாரமாக விளையாடி ரைடு மூலம் 12 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இதேபோல அனுபவம் வாய்ந்த ஜஸ்வர்சிங்கும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் 8 புள்ளிகள் எடுத்தார். வீரர்களை மடக்கி பிடிப்பதில் மஞ்சித் சில்லார் நன்றாக செயல்பட்டார்.

இந்தப்போட்டியில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். அவர் 87 ஆட்டத்தில் 609 ரைடு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் சவுத்ரி 700 புள்ளிகளும், பர்தீப் நர்வால் 671 புள்ளிகளும் ரைடு மூலம் எடுத்தனர்.

ஒட்டு மொத்தமாக டேக்கிள் பாயண்டையும் சேர்த்து 630 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் ரைடு மூலம் 81 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

தமிழ்தலைவாஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 3-வது இடத்தில் இருக்கிறது.அந்த அணி 8-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்சுடன் வருகிற 26-ந்தேதி மோதுகிறது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலாஸ் (இரவு 8 மணி), புனேரி பில்டான்- உ.பி.யோதா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *