Tamilசெய்திகள்

காங்கிரஸின் ஊழலால் தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பா.ஜ.க. வணிகர் தாமரை மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாநில செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்றார். வணிகப்பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் திருமலை, மாநில செயலாளர்கள் சஞ்சீவி, சி.ராஜா, ஏ.டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மாநாட்டில், தமிழகத்தில் வணிகர் நல வாரியத்தை முதல்-அமைச்சர் மீண்டும் செயல்படுத்த வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்கள் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தி வரியை குறைத்தது போல, மாநில அரசும் ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

காங்கிரஸ் கொடுத்த 48 ஆண்டுகால ஆட்சியை 48 மாதத்தில் பா.ஜ.க. கொடுத்திருக்கிறது. ஊழல் செய்து நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சி ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருக்கிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் கடன் 3 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் கடன் பெற்று ஓடியவர்களின் சொத்தை பறிமுதல் செய்யவும், அவர்களை இந்தியாவுக்கு கொண்டுவரவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கிறது. இதனை 8 சதவீதமாக அதிகரிப்பதற்கு மோடி முயற்சி எடுத்து வருகிறார்.

மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்களை வணிகர்கள் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் அமையவேண்டும். தமிழகத்திலும் மாறுதல் தேவை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *