புதிய நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் உள்ளது – பிரதமர் மோடி பேச்சு

சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை உரையாற்றினார். மாநாட்டில் அவர் பேசியதாவது:

உலக நிதி மையமாக சிங்கப்பூர் திகழ்கிறது. இந்தியாவில் தற்போது தொழில்நுட்ப புரட்சி நடைபெற்று வருகிறது. 130 கோடி மக்களின் வாழ்க்கையை இந்த புரட்சி மாற்றி உள்ளது. உலக பொருளாதாரத்தின் வடிவம் மாறி வருகிறது. தொழில்நுட்பம், புதிய உலகின் போட்டியாகவும் ஆற்றலாக உள்ளது. இது எண்ணற்ற வாய்ப்புக்களையும் உருவாக்கி தருகிறது.

2014-க்கு முன்பு 50 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களே வங்கி கணக்கு வைத்திருந்தனர். 2014-ம் ஆண்டுக்கு பிறகு, ஒவ்வொரு குடிமகன், ஒவ்வொரு புறநகர் கிராமங்களும் வளர்ச்சி திட்டங்களால் வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 128 வங்கிகள் யூபிஐ மூலம் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் யூபிஐ மூலம் நடந்த பணபரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் டிஜிட்டல் பணபரிவர்த்தனை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. மனித உள்கட்டமைப்பு அதிகமுள்ள நாடு இந்தியா. விரைவில் உலகின் தொடக்க மையமாக இந்தியா மாறும்.

ஆதார் மூலம் நூறு கோடிக்கும் அதிகமானோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால், மக்களுக்கு பொருளாதார உதவிகள் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், புதிய நிறுவனங்கள் துவங்குவற்கு ஏற்ற சூழல் இந்தியாவில் நிலவுகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய உலக நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools