மம்தா பேனர்ஜியை 19 ஆம் தேதி சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விலகினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரையும் சந்தித்தார்.

எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ந்தேதி டெல்லியில் உள்ள ஆந்திர பிரதேசம் பவனில் நடத்தப்படும். இந்த கூட்டத்தில அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் மேற்கு வங்காள மாநில முதல்வரான மம்தா பானர்ஜியை வரும் 19-ந்தேதி கொல்கத்தாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்திற்கு மம்தா வந்தால், பாஜனதாவிற்கு எதிரான கூட்டணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools