Tamilசெய்திகள்

கேரள அமைச்சர் மேத்யூ டி தாமஸ் ராஜினாமா !

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ டி தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த நிலையில், மேத்யூ டீ தாமஸ் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தாமஸ், கட்சி தலைமை எடுத்த முடிவிற்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ததாக கூறினார்.

தாமஸ் ராஜினாமா செய்ததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டி, பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறலாம் எனவும், நாளை மாலை அவர் பதவியேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், அமைச்சர் மாற்றம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *