காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் – மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 2 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 207 வார்டுகளுக்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 49 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 62 வார்டுகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மீதமுள்ள 96 வார்டுகளில் இன்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும்.

தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் பார்வையாளர்கள், நோடல் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதல் இரண்டு கட்ட தேர்தலில் வாக்கு சதவீதம் மிக குறைவாக இருந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தேசிய மாநாட்டுக் கட்சியின் இரண்டு தொண்டர்கள் நேற்று பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். மேலும், ஓட்டு போட யாரும் போகக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools