விஜய் ரசிகர்கள் மீது போலீசில் புகார் அளித்த நடிகர் கருணாகரன்

சூது கவ்வும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர் கருணாகரன். அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கருணாகரனுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. சில நாட்களில் அது முடிவுக்கு வந்தது.

இந்தநிலையில் ‘சர்கார்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் பேசும்போது, அரசன் பற்றிய குட்டிக் கதை ஒன்றை கூறினார்.

அதை மேற்கோள் காட்டி நடிகர் கருணாகரன் அரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்தக்கதை, அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதா இல்லை நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என ரசிகர்களிடமும் சொல்லிப் பாருங்கள். கேட்கிறார்களா பார்ப்போம்’ என்று ஒரு பதிவை போட்டிருந்தார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார்.

விக்கிபீடியாவில் உள்ள கருணாகரன் பற்றிய குறிப்பை எடுத்துப் பதிவு செய்து, கருணாகரனை ‘ஆந்திராக்காரர்’ என அடையாளப்படுத்த முயன்றனர். இதற்கு பதில் தரும் வகையில் கருணாகரன் ‘நான் பிறந்தது ரெட்ஹில்ஸ் அருகிலுள்ள பாடியநல்லூர்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் ‘நான் தமிழகத்தை சேர்ந்தவனா என்று முட்டாள்தனமான கேள்விகளை கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று நான் எப்பொழுதாவது கேட்டேனா?’ என்று கேட்டுள்ளார். அடுத்த கேள்வி என் தாய் மொழி பற்றி. நீங்கள் ரெடியா சர்கார் அடிமை என்றும் கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருணாகரனின் இந்த பதில்கள் ரசிகர்களை மேலும் ஆத்திரமடைய செய்யவே மோசமான வார்த்தைகளால் கருணாகரனை திட்ட தொடங்கினார்கள்.

கருணாகரனும் ‘நீங்கள் என்னை மிரட்டுவது பதில் அளிக்க முடியாத உங்களின் இயலாமையை காட்டுகிறது. அது எனக்கு பிடித்துள்ளது’ என்றும் ரசிகர்கள் போடும் கமெண்டுகள் அந்த நடிகரின் தராதரத்தை விவரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இவற்றை ஆதாரமாக வைத்து கருணாகரன் தனது தனிப்பட்ட வாழ்வு, குடும்பம், தோற்றம் என பல விதங்களிலும் தவறாக கொலை மிரட்டல் விடுத்த சிலர் மீது இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: Cinema news