Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நகராட்சி தேர்தல் – செல்போன், இணையதளம் துண்டிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஷலீன் காப்ரா அறிவித்தார். இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் நவம்பர் 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி நகராட்சி அமைப்புகளில் உள்ள 1,145 வார்டுகளில் முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) 422 வார்டுகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வார்டுகளில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 159 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 584 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

தேர்தலையொட்டி ஜம்மு மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இன்று போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றம் மிகுந்தவையாக கண்டறியப்பட்டு உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் வேட்பாளர்கள் அனைவரும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். தெற்கு காஷ்மீர் பகுதியில் செல்போன் இன்டர்நெட் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. காஷ்மீரின் பிற பகுதிகளில் மொபைல் இன்டர்நெட் வேகம் 2ஜி ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், எனவே மக்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *