ஆடுகளத்தில் புகுந்து ரோகித் சர்மாவுக்கு முத்தம் கொடுத்த ரசிகர் – வைரலாகும் வீடியோ

இந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பீகார் 69 ரன்னில் சுருண்டது. பின்னர் 70 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹிட்மேன் ரோகித் சர்மா இடம்பெறாததால் மும்பை அணிக்காக விளையாடினார்.

அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தடுப்பு வேலியை தாண்டி ஆடுகளத்தை நோக்கி ஓடிவந்தார். அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோகித் சர்மா அருகில் வந்து அவரது காலை தொட்டு கும்பிட்டார். அத்துடன் அல்லாமல் ரோகித் சர்மாவை கட்டிப்பிடித்து கண்ணத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தார்.

மீண்டும் முத்தம் கொடுக்க முயற்சித்தார். அப்போது ரோகித் சர்மா விலகிவிட்டார். அதனால் அந்த ரசிகர் மீண்டும் காலில் விழுந்து கும்பிட்டு, அப்பாடா… ரோகித் சர்மாவிற்கு முத்தம் கொடுத்து விட்டேன் என் குஷியில் துள்ளிக்குதித்து கேலரிக்கு சென்றார்.

இந்த காட்சியை ஒருவர் படம்பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டியில் மும்பை 12.3 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools