Tamilசெய்திகள்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 2 கோடியே 58 லட்சத்து 70 ஆயிரத்து 941 பேர் ஓட்டு போட்டனர்.

ஊராட்சி தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். ஊராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ஆகியோரும் ஓட்டு சீட்டு மூலம் நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்காக 4 வண்ணங்களில் ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதன் பிறகு கடந்த 11-ந்தேதி மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

இருப்பினும் மறைமுக தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்களை தன் பக்கம் இழுத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை அ.தி.மு.க. கைப்பற்றி விட்டதாக தி.மு.க. கூட்டணியினர் குற்றம்சாட்டினர்.

அதே நேரத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த மற்ற கட்சிகளின் கவுன்சிலர்களும் கூட்டணிக்கு எதிராக அணி மாறி ஓட்டு போட்டனர். இதனால் மறைமுக தேர்தலின்போது கவுன்சிலர்கள் கடத்தல், மோதல் உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறின.

2-ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மறைமுக தேர்தல் நடைபெற்ற 12-ந்தேதி வரையில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்போது தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 529 பேரூராட்சிகளும், 125 நகராட்சிகளும் உள்ளன.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் தேர்தலை ஒன்றாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள 27 மாவட்டங்களிலும் நகராட்சி, பேரூராட்சி தேர்தல் நடைபெற உள்ளன. சென்னை நீங்கலாக 36 மாவட்டங்களுக்கும் சேர்த்து இந்த தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் அட்டவணையும் தயாராகி உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வருகிற 27-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட முடிவு செய்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடை பெற்ற போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறு வரையறை பணிகளை 3 மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனறு சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது.

இதற்கான பணிகளிலும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளும் 27-ந்தேதிக்குள் முடிந்து விட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அந்த தேர்தலை பொறுத்தவரை கிராமப்புறங்களில் நடை பெற்ற தேர்தல் ஆகும்.

அதே நேரத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு போலீசாரும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன.

நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்த பின்னர் இந்த 15 மாநகராட்சிகளுக்கும் தனியாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *