Tamilசெய்திகள்

80வது பிறந்தநாள் கொண்டாடிய மூதாட்டிக்கு 80 வகை உணவுகள் வழங்கிய குடும்பத்தார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை சேர்ந்தவர் விமலாதேவி (வயது 80). இவரது கணவர் சுப்புராம். இவர்களுக்கு 8 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டியின் கணவர் சுப்புராம் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து மூதாட்டி விமலாதேவி தனது மகன்கள், மகள்கள் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது 5 தலைமுறையை கண்ட மூதாட்டிக்கு அவரது மகன், மகள், பேரன்கள், கொள்ளு பேரன்கள் என 12 பேர் உள்ளனர். இவர்கள் மற்றும் உறவினர்கள் பாட்டியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து பாட்டி எப்போதும் இயற்கை முறையில் சமைக்கும் உணவுகளில் 80 வகை சைவ உணவுகளை உறவினர்கள் ஒன்றுகூடி தாங்களே தயார் செய்து பிறந்த நாளை கொண்டாடி மூதாட்டிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது உள்ள காலகட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிப்பது ஒரு வேலையாக கருதி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடும் நிலையில் 5 தலை முறையினர் 80 வயதான மூதாட்டிக்கு பிறந்தநாள் கொண்டாடியது வரவேற்பை பெற்றுள்ளது.