Tamilசெய்திகள்

5 பேர் உயிரிழந்ததற்கு மருத்துவமனை காரணமல்ல- அரசு டீன் விளக்கம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெய்த மழை காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.

அப்போது அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

மின்தடை ஏற்பட்ட உடனேயே அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எதுவும் செயல்படவில்லை. ஜெனரேட்டர் உடனே இயக்கப்படாததால் தான் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள் இறந்துள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆனால் இதனை அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஆஸ்பத்திரியில் ஜெனரேட்டர் நல்ல முறையில் இயங்கி வருகிறது. மின்தடை ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டரை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்த 5 நோயாளிகள் ஏற்கனவே கவலைக்கிடமாக இருந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி தான் அவர்கள் இறந்துள்ளனர் என ஆஸ்பத்திரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டீன் வனிதா கூறுகையில், நேற்று மழை பெய்தபோது ஆஸ்பத்திரியில் மின்தடை ஏற்பட்டது உண்மை தான். ஜெனரேட்டரும் உடனடியாக இயக்க முடியவில்லை. ஆனால் ஏற்கனவே வெண்டிலேட்டரில் 2 மணி நேர அளவுக்கு மின்சார ‘பேக் ஆப்’ இருந்தது.

இதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு எந்தவித தடையுமின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இறந்த நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில்தான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பலனின்றி தான் இறந்துள்ளனர். எனினும் உறவினர்களின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *