Tamilசெய்திகள்

5 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது

ஆடி மாத பூஜைக்காக  சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார்.

மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன், நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. ஆடி மாத பூஜையின் நிறைவு நாளான நேற்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் பிரசித்தி பெற்ற கலச பூஜை

நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

5 நாட்களாக நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோவில் நடை இரவு 9 மணிக்கு அடைக்கப்பட்டது. ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் முதல் நாள் மட்டும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 நாட்கள் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆவணி மாத பூஜை மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை  ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் 15-ந் தேதி மீண்டும் திறக்கப்படும். 16-ந் தேதி புத்தரிசி பூஜை நடைபெறும். 23-ந் தேதி ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.