Tamilசெய்திகள்

42 பேருக்கு நாட்டு நலப்பணித் திட்டம் விருது – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

நாட்டு நலப்பணித் திட்டத்தை (என்எஸ்எஸ்) மேலும் ஊக்குவிக்கும் விதத்தில் சிறப்பான சமூக சேவை புரிந்த பல்கலைக்கழகம்/பனிரெண்டாம் வகுப்பு குழுக்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் மற்றும் திட்ட அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறது.

அவ்வகையில், 2019-20ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து காணொலி மூலம் 2019-20-ம் வருடத்திற்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகளை வழங்கினார்.

பல்கலைக்கழகம்/பனிரெண்டாம் வகுப்பு குழுக்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் மற்றும் திட்ட அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் மற்றும் இணை மந்திரி நிசித் பிரமாணிக் ஆகியோர் டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் இருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.