Tamilசெய்திகள்

40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து, பொருளாதாரத்தை நிலைநாட்ட இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் 40 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் குறைந்த சதவீதம் பதிவாகியுள்ள 40 மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

50 சதவீதத்திற்கும் குறைவாக முதல் டோஸ் பதிவாகியுள்ள மாவட்டங்கள் மற்றும் 2-வது டோஸ் மிகவும் குறைவாக பதிவாகியுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் இந்த ஆலோசனையை நடத்த உள்ளார்.