Tamilசெய்திகள்

30 அடி கிணற்றில் விழுந்த குட்டி யானை 11 மணி போராட்டத்திற்குப் பிறகு மீட்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. சண்முகநாதன் என்பவர் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த யானை குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சம்பவ இடத்தை பார்வையிட்டு நேற்று காலை முதல் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.

ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 3 மணி நேரத்துக்கும் மேலாக குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றது. அதில் முடியாததால் இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு கிணற்றைச் சுற்றி இருக்கும் மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இதனிடையே, தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சுமார் 30 அடி கிணற்றில் விழுந்த யானை குட்டி சுமார் 11 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டது. இதையடுத்தே வனத்துறையினர், அப்பகுதி மக்கள் பெருமூச்சு விட்டனர்.