Tamilசினிமா

25 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் நடிக்கும் அரவிந்த்சாமி

தமிழில் ரோஜா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதையடுத்து பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்த பிரபலமான இவர், சில வருடங்கள் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் மணிரத்தினத்தின் கடல் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார்.

அரவிந்த் சாமி நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’, ‘தலைவி’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளது. இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்த் சாமி நடிப்பதால் இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அரவிந்த் சாமி கடைசியாக கடந்த 1996-ம் ஆண்டு வெளியான தேவராகம் எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒட்டு படம் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அரவிந்த் சாமி, நேரடி மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.