X

2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

* அடுத்த தலைமுறை பற்றி சிந்திக்கும் அரசு தி.மு.க. அரசு.

* தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின், 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

* 65,483 பேர் கடந்த மூன்று ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

* உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

* 3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* 2026 ஜனவரிக்குள் 46,584 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முன்னதாக, நெல்லையில் சிபிஎம் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இருவேறு சமூகத்தை சேர்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்யப்பட்டு அது தொடர்பான புகைப்படம் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மணமகள் வீட்டார்கள் சிபிஎம் அலுவலகத்தை சேதப்படுத்தி உள்ளார்கள். இந்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தை கொண்டு வருவதை விட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே சரியானது. கல்வி, வேலைவாய்ப்பில் சமூகம் உயரும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறையும்.
பெண்களுக்கான திட்டத்தை அரசு மக்களிடம் கொண்டு செல்லும்போது சமூகத்தில் மாற்றம் ஏற்படும். புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.