Tamilசெய்திகள்

2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் – நிதிஷ்குமார் பேச்சு

8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:-

எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் (மோடி), 2024-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள், நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் கட்சியின் பலம் குறைந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் பலம் நன்றாக இருந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும். உரிய நேரத்தில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன். விரைவில் சட்டசபையை கூட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.