Tamilவிளையாட்டு

2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணியில் 3 இந்திய வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும். கடந்த வருடம் டி20 உலககோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டி20 உலககோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா 1 வீரர்களும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர். ஐசிசி அறிவித்துள்ள 2022ம் ஆண்டுக்கான டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரும், பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானும் தேர்வு செய்ப்பட்டுள்ளனர். இதைதொடர்ந்து 3வது மற்றும் 4வது வரிசையில் ஆட இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஐசிசி அறிவித்த அணியில் சாம் கர்ரன் மட்டுமே இடது கை பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி விவரம்:- 1. ஜோஸ் பட்லர் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) (இங்கிலாந்து) 2. முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) 3. விராட் கோலி (இந்தியா) 4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா) 5. க்ளென் பிலிப்ஸ் (நியூசிலாந்து) 6. சிக்கந்தர் ராசா (ஜிம்பாப்வே) 7. ஹர்த்திக் பாண்ட்யா (இந்தியா) 8. சாம் கரன் (இங்கிலாந்து) 9. வனிந்து ஹசரங்கா (இலங்கை) 10. ஹாரிஸ் ராப் (பாகிஸ்தான்) 11. ஜோசுவா லிட்டில் (அயர்லாந்து)