2 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும் பெய்கிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்கிறது. இதனால் மண்ணில் ஈரப்பதம் ஏற்பட்டு குளிர்ந்த காற்று வீசுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 21-ந் தேதி உருவாகிறது. இதனால் கேரளா, கர்நாடகா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. நகரின் பல்வேறு இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

புறநகர் பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. நள்ளிரவு வரை இடி-மின்னலுடன் பல இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.

ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சாரமும் தடைபட்டது. போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டன. தொடர்ந்து 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools