Tamilவிளையாட்டு

2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 29 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன

சர்வதேச செஸ் சம்மேளனம் சார்பில் 1927-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி லண்டனில் அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக 2018-ம் ஆண்டு இந்தப்போட்டி ஜார்ஜியா நாட்டில் நடந்தது.இதில் சீனா தங்கம் வென்றது. அமெரிக்கா, ரஷியா முறையே 2-வது, 3-வது இடங்களை பிடித்தன. கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த ஆண்டுக்கான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பை சென்னை பெற்று உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள “போர் பாயிண்ட்ஸ்” ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் இன்று (28-ந்தேதி) தொடங்குகிறது. ஆகஸ்ட் 10-ந்தேதி வரை செஸ் ஒலிம்பியாட் திருவிழா நடைபெறுகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற்றாலும் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்தப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா பிரமாண்டமாக நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் செழுமையான கலாச்சார மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை தொடக்க விழா மட்டுமே நடைபெறும். 29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன. இது பெரிய சாதனையாகும்.

உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், மகளிர் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்கிறார்கள். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 30 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஆலோசகராக உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 19 சுற்றுகளை கொண்டது. சுவிஸ் முறையில் ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் தினசரி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ந்தேதி ஓய்வு தினமாகும். தொடக்க விழாவுக்கு முன்பு மாலை 5 மணிக்கு நடுவர்கள் கூட்டம் நடைபெறும். இதே போல முதலாவது ஆட்டம் நடைபெறுவதற்கு முன்பு 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு கேப்டன்கள் கூட்டம் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் மாற்று வீரராக இருப்பார். 4 பேர் தான் ஆடுவார்கள். வெற்றி பெற்ற அணிகள் வெற்றி பெற்ற அணியுடனும், தோல்வி அடைந்த அணிகள் தோல்வி அடைந்த அணியுடனும் விளையாடும்.

வெற்றிக்கு 2 புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும். தோற்றால் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. 4 பேர் ஆடும் ஆட்டத்தின் முடிவில் யார் அதிக புள்ளி பெற்று இருக்கிறார்களோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மொத்தத்தில் 2 புள்ளி வழங்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒரு நகர்வுக்கு 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். 30-வது காய் நகர்த்தலுக்கு முன்பாக பரஸ்பரம் அடிப்படையில் டிராவில் முடித்துக்கொள்ள முடியாது. சுற்றுகள் முடிவில் அதிக புள்ளிகளை எடுக்கும் அணிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும். 2-வது, 3-வது இடங்களுக்கு முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் வழங்கப்படும்.