Tamilசெய்திகள்

150 நாட்கள் கண்டெய்னர்களில் தங்கும் ராகுல் காந்தி – காங்கிரஸ் அறிவிப்பு

இந்திய ஒற்றுமை பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் பாத யாத்திரைப் பயணம் கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல் காந்தியிடம் வழங்கி பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

இன்று முதல் 10ந் தேதிவரை குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பாதயாத்திரை மொத்தம் 150 நாட்கள் திருவனந்தபுரம், கொச்சி, நிலாம்பூர், மைசூர், பெல்லாரி, தெய்ச்சூர், விகாராபாத், நாந்தெட், இந்தூர், கோட்டா, தவுசா, ஆழ்வார், புலுந்த்ஷகர், டெல்லி, அம்பாலா, பதன் கோட், ஜம்மு வழியாக ஸ்ரீநகரை சென்றடைகிறது.

இந்நிலையில் தமது நடை பயணத்தின் போது இரவு ராகுல்காந்தி எங்கு ஓய்வு எடுப்பார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. அதன்படி அவர் எந்த ஹோட்டலிலும் தங்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி இரவு வேளையில் தூங்குவதற்காக பாத யாத்திரை செல்லும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப 60 சிறப்பு கண்டெய்னர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் படுக்கை வசதி, கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்டெய்னர்கள் ராகுல்காந்தியின் நடைபயணம் மேற்கொள்ளும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த 150 நாட்களுக்கு இந்த கண்டெய்னர்களில் ராகுல்காந்தி இரவு நேரம் ஓய்வெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தமது பயணத்தில் உடன் வருவோர் அனைவருடன் ஒரே நேரத்தில் ஒன்றாகவே சாப்பிட ராகுல் முடிவு செய்துள்ளதாகவும், நடைபயணம் முடியும் வரை ஆடம்பரம் இன்றி எளிய வாழக்கை முறையை கடைப்பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவலகள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையில், தமது சகோதரரின் பாரத் ஜோடோ யாத்ரா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நாங்கள் ஒரு நேர்மறையான அரசியலைத் தொடங்குகிறோம், நாங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம்.எங்கள் அன்பான நாட்டை ஒன்று படுத்துங்கள். இந்தியாவை ஒன்றாக இணைப்போம் என்று தனது பேஸ்புக் வீடியோவில் தெரிவித்துள்ளார். இன்றைய அரசியல் நாட்டு மக்களின் பிரச்சினைகளை புறக்கணித்து முற்றிலும் மாறுபட்ட திசையில் செல்வதாகவும், இந்த பாத யாத்திரை மூலம் சமானிய மக்களின் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை வெளியே கொண்டு வர விரும்புகிறோம் என்றும் பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.