X

150 ஆண்டுகள் பழமையான நாகை மருத்துவமனையை மூடுவதா? – ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகை நகரில் உள்ள மக்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, மருத்துவ சிகிச்சை பெறவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். திடீர் உடல் நலக்குறைவோ, மாரடைப்போ, விபத்தின் காரணமாக எலும்பு முறிவு, தலைக்காயம் ஆகியவை ஏற்பட்டாலோ, 15 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

இரண்டு மருத்துவமனைகளும் முழு வீச்சில் செயல்பட்டால்தான், நோய்களினாலும், விபத்துகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக சிகிச்சை பெற்று விரைவில் குணம் பெற வழிவகை ஏற்படும். சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசு மருத்துவமனையை மூடுவது என்ற தி.மு.க. அரசின் செயல்பாடு “அழிப்பது சுலபம், ஆக்குவது கடினம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. மக்களின் உயிருடன் விளையாடும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

நாகை நகரில் வசிக்கும் மக்களின் துன்பங்களைப் புரிந்து கொண்டும், நேரத்தின் அருமையை கருத்தில் கொண்டும், நிதியைப் பற்றி யோசிக்காமல் மக்களின் உயிரை மட்டுமே கவனத்தில் கொண்டு, 150 ஆண்டு கால பழமைவாய்ந்த நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை நாகை நகரில் தொடர்ந்து முழுவீச்சில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.