Tamilசெய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத 48 ஆயிரம் மாணவர்களை துணைத்தேர்வு எழுத வைப்பதற்கு நடவடிக்கை – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை 48 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் செங்கோட்டையன், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, காங்கிரஸ் சார்பில் பிரின்ஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாகை மாலி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் சமது உள்ளிட்டோர் அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்கள். அதற்கு விளக்கம் அளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதும் மாணவர்கள் 2020-21-ல் கொரோனா காலக்கட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆவர். இவர்களில் 47 ஆயிரத்து 943 பேர் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதவில்லை. இவர்கள் அனைவரையும் பிளஸ் 2 துணைத்தேர்வை எழுத வைப்பதற்காக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடைநிற்றல் மாணவர்களை துணைத்தேர்வுக்கு அழைக்கும்போது பெற்றோர்கள் தவறாமல் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில் பள்ளிக்கூடங்களில் சேரும் அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 வரை முழுமையான கல்வியை கற்க வேண்டும் என்பதில் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இடைநிற்றல் மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து 4 வாரங்கள் வரை அவர் வரவில்லை என்றால் அவரை இடைநின்ற மாணவராக கருதி நேரில் சென்று பள்ளியில் மீண்டும் சேர்க்க அறிவுறுத்தியுள்ளோம். வட்டார, மாவட்ட அளவிலான அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

துணைத்தேர்வு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் மாணவர்களுக்கு விழிப்புணர்வும் அளிக்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களை ஆசிரியர்கள் நேரில் சென்று அழைத்தால் பெற்றோர்கள் மறுக்காமல் பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவர்களை இந்த அரசு பார்த்துக்கொள்ளும்.

இவ்வாறு அவர் பேசினார்.