100 கேட்சுகள் பிடித்து ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த டோனி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்துள்ளார்.

பஞ்சாப் அணி கேப்டன் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த டோனி கைக்குச் சென்றது. இதனால் 99 கேட்சுகள் பிடித்திருந்த டோனி தனது 100-வது கேட்சை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார். இது தவிர டோனி 39 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரையும் சி.எஸ்.கே. கைப்பற்றும் என டுவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்துச் செய்தியில் ரெய்னா பதிவிட்டார்.

இதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools