Tamilசெய்திகள்

10 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடைபெற்ற தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மகன் ஆர்.நெல்சன் மண்டேலா பா.அபிராமி ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

இந்த திருமண விழாவுக்கு தலைமை பொறுப்பு ஏற்று மணவிழாவை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தும் வாய்ப்பினை பெற்றதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கி தந்த ராஜாவுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், மணமக்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ராஜாவை பற்றி நான் அதிகம் பேச தேவையில்லை. தாம்பரம் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் தான் எம்.எல்.ஏ. என்று முடிவு செய்து 3 முறை நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். மக்களிடம் அவர் செல்வாக்குபெற்றவராக விளங்கிக்கொண்டு இருக்கிறார்.

அவர் சட்டமன்றத்தில் எப்போது பேசுவதற்கு எழுந்தாலும் தனது தொகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

1980ல் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு படிப்படியாக உயர்ந்துள்ளார். அவர் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருப்பதுபோல் 3 முறை நகரசபை தலைவராகவும் இருந்துள்ளார்.

தாம்பரம் இந்த அளவு வளர்ந்துள்ளதற்கு அவரது பங்கு முக்கியமானது. அவர் என்னிடம் கூட தேவையில்லாமல் பேசமாட்டார். எதை பேசினால் வெற்றிகாண முடியுமோ அதை உணர்ந்து பேசுவார். அவர் ஈடுபட்டுள்ள தொழிலிலும் தொட்டதெல்லாம் துலங்கிவிடும்.

ராஜா தனது மகனுக்கு தென்ஆப்பிரிக்காவின் சுதந்திர போராட்டத்துக்காக போராடிய நெல்சன் மண்டேலா பெயரை சூட்டியிருப்பது நாட்டுப்பற்றை, தியாக உணர்வை எடுத்துக்காட்டுகிறது. நிறவெறிக்கு எதிராக போராடியவர் நெல்சன் மண்டேலா. சிறையில் இருந்து மீண்ட பிறகும் நாட்டை ஆட்சி செய்யும் தலைவராக உயர்ந்தவர். அவரது பெயரை தனது மகனுக்கு சூட்டி இருப்பது பெருமைக்குரிய ஒன்று.

அவர் கரம்பிடித்துள்ள மணமகள் அபிராமி தனது கணவருக்கு இந்த பெயரை வைத்திருப்பதை பார்த்து பெருமை படலாம். அந்த மண்டேலா போல இந்த மண்டேலாவும் அமைதியாக இல்லறம் நடத்துவார் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உண்டு.

தி.மு.க. ஆட்சி அமைந்ததற்கு பிறகு தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சாதனைகள் மட்டுமல்ல ஏற்கனவே இருந்த சோதனைகளுக்கு முடிவுகட்டி இருக்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாத்துக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம் தான் முடிந்திருக்கிறது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ அதைவிட பல மடங்கு சாதனையை இன்றளவும் நாம் சாதித்து காட்டி இருக்கிறோம்.

இல்லம் தேடி கல்வியாக இருந்தாலும் மக்களை தேடி வரக்கூடிய மருத்துவமாக இருந்தாலும், நான் முதல்வன் என்கிற திட்டமாக இருந்தாலும் இன்னுயிர் காப்போம் நம்மை காக்க 48 என்கிற திட்டமாக இருந்தாலும் சமத்துவபுரங்களாக இருந்தாலும், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்கிற திட்டமாக இருந்தாலும் ஏறக்குறைய 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கக்கூடிய பணிகளாக இருந்தாலும், தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதிகளை சொன்னோமோ அந்த வாக்குறுதிகளை மட்டுமல்ல சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய ஆட்சி.

நான் சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், அதிகாரிகளை அழைத்து பேசக்கூடிய கூட்டங்களாக இருந்தாலும் ஆய்வு நடத்தக் கூடிய கூட்டங்களாக இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தொடர்ந்துநான் சொல்லிக்கொண்டிருப்பது இதை என்னுடைய ஆட்சி என்று சொல்ல மாட்டேன். நம்முடைய ஆட்சி என்று தான் நான் சொல்வேன் என்ற அடிப்படையில் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் நேரத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது நான் குறிப்பிட்டு சொன்னேன் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யக்கூடிய ஆட்சியாக நம்முடைய ஆட்சி இருக்கும் என்றேன்.

வாக்களிக்காதவர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையில் வாக்களிக்க தவறியவர்கள் இவர்களுக்கு வாக்களிக்காமல் போய்விட்டோமே என்று வருத்தப்படக்கூடிய அளவுக்கு நாம் ஆட்சியை நடத்துவோம் என்று நான் உறுதியாக எடுத்து சொன்னேன். அதைத்தான் இன்றைக்கு நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையை புத்தகமாக வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது நாம் தேர்தல் அறிக்கை வெளிட்டது மட்டுமல்ல. இந்த ஓராண்டு காலத்தில் என்னென்ன செய்து முடித்திருக்கிறோம் என்பதையும் புத்தகமாக வெளியிட்டு மக்களிடம் கருத்து சொல்லக்கூடிய அளவுக்கு பல காரியங்களை நாம் செய்து முடித்திருக்கிறோம்.

நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒரு மிகப்பெரிய சாதனை என்ன வென்றால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கக்கூடிய பேருந்து கட்டணம் சலுகை. இந்த திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின பெண்கள் அதிக அளவிற்கு பயன்பெறக்கூடிய வகையில் அந்த திட்டம் இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிக் கொண்டு இருக்கிறது.

வேலைக்கு போகக்கூடிய பெண்களின் அன்றாட செலவில் பெரும் சுமையை குறைத்திருக்கிறோம். புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டுமென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயில் இருந்து 1600 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய ஒரு சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம். இப்படி மிச்சமாகும் பணத்தை சேமித்து வைக்கும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறார்கள்.

நாங்கள் போட்ட கையெழுத்தின் காரணமாக எத்தனை கோடி மக்கள் பயன் பெற்று இருக்கிறார்கள் என்று சட்டமன்றத்தில் நான் புள்ளி விவரத்தோடு எடுத்துச் சொல்லி இருக்கிறேன். இப்படி கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்வில் ஒளியேற்றி இருக்கக்கூடிய நம்முடைய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

பாரதிதாசன் எடுத்துச்சொல்லி இருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காக நாட்டிற்கு தொண்டர்களாக இருந்து நமது மணமக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்கக்கூடியவர்களாக உங்கள் வாழ்க்கையை நடத்திக்காட்ட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் சொல்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.