Tamilசெய்திகள்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஒட்டுநர் உரிமம் ரத்து – கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகத்தில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்தால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. அது கடந்த 2019-ம் ஆண்டு ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அந்த அபராத தொகை ரூ.500 ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் சாலைபாதுகாப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட குழு, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர்களின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்படி கர்நாடக அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், கர்நாடகத்தில் ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பயணித்தால் அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் கூடுதல் போக்குவரத்து கமிஷனர் நரேந்திர ஹொல்கர் கூறியதாவது:-

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுகிறவர்களின் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் அனைத்து மண்டல போக்குவரத்து அலுவலகங்களும் அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். அதனால் தான் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு நரேந்திர ஹொல்கர் கூறினார்.