வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்த துவங்கினர்.
ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் மற்றும் ஹன்சிகா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு
தோற்றத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஹன்சிகா தனது ட்விட்டரில், நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே இந்த தகவல் வெளியே கசிந்துவிட்டது. ஆம், நானும், சிம்புவும் மஹா படத்தில் இணைந்துள்ளோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் ஹன்சிகா – சிம்பு மீண்டும் இணைந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.