ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டனுக்கு கொரோனா பாதிப்பு

ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை 11 நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராக ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் யூரோ போட்டிக்கான ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் செர்ஜியோ பஸ்கெட்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அணியினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அணியின் மற்ற வீரர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஸ்பெயின் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்பெயின் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 14-ந் தேதி சுவீடனை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் செர்ஜியோ பஸ்கெட்ஸ் ஆடுவது சந்தேகம் தான். 32 வயதான செர்ஜியோ ஸ்பெயின் அணிக்காக 120-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவர் 2010-ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2012-ம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools