Tamilவிளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ், இலங்கை இடையிலான டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு

இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்னில் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்னிலும் வெளியேறினர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
கடைசி கட்டத்தில் கார்ன்வால் 39 ரன்னில் வெளியேறினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மீதமுள்ள ஆட்டம் கைவிடப்பட்டது.

இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 3 விக்கெட் வீழ்த்தினர்.