X

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடந்த வாரம் தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால் 547 ஆம்னி பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழக பதிவெண்ணாக மாற்றினால் மட்டுமே 547 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெவிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசம் வழங்க ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அதிகாரிகளை சந்திக்கவும் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, ஏற்கனவே போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் இயக்கினால் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.