Tamilசினிமா

வீட்டில் திருடு போன விவகாரம் – ஊடகங்களை எச்சரித்த நடிகை பார்வதி நாயர்

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில், உத்தம வில்லன், சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். அண்மையில் இவரின் வீட்டில் விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம் ஒன்றும் ரூ.3 லட்சம் மதிப்பிலான இன்னொரு கைகடிகாரமும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சில ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என நடிகை பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை‌ விடுக்கப்பட்டுள்ளது.