Tamilசெய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடந்து வருகிறது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை.

புதுச்சேரியில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.