Tamilசெய்திகள்

விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தி உள்ளோம் – பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி நேற்று கர்நாடகாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த மாதத்தில் 3-வது முறையாக பிரதமர் மோடி கர்நாடகம் வந்து உள்ளார். கடந்த 2 மாதங்களில் அவர் 5-வது முறையாக கர்நாடகம் வந்து உள்ளார்.

பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு நேற்று வருகை தந்து, ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சிவமொக்கா விமான நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதன்பின்னர், பிற்பகலில் அவர் பெலகாவி நகருக்கு புறப்பட்டார். ரூ.2,253 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

கர்நாடகாவின் பெலகாவி நகரில் கூட்டத்தின் முன் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியாவின் அனைத்து விவசாயிகளும் பெலகாவி நகரில் இன்று இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள். கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு பெலகாவியில் இருந்து ரூ.16 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டு உள்ளது. இந்த தவணை தொகையானது ஹோலி பண்டிகைக்கான வாழ்த்து ஆகும்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை நாங்கள் ரூ.2.5 லட்சம் கோடி செலுத்தி உள்ளோம். அவற்றில் குறிப்பிடும்படியாக பெண் விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக வரவு வைக்கப்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.